கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக செயற்கைகோளையும் சுமந்து சென்றது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்!
கன்னியாகுமரி மாவட்ட நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் தயாரித்த செயற்கைகோளையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டா: கன்னியாகுமரி மாவட்ட நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் தயாரித்த செயற்கைகோளையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் 15 கிலோ எடை கொண்டதாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கார்ட்டோசாட் 2இ செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் உட்பட 14 நாடுகள் உருவாக்கியுள்ள 29 சிறிய ரக செயற்கைக்கோள்களும் அடங்கும். மேலும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள செயற்கைகோளும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்பப்பட்டது.
இந்த செயற்கைகோள் 15 கிலோ கொண்டதாகும். இதனை தமிழகத்தின் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்களே தயாரித்துள்ளனர்.
இந்த செயற்கைகோள் நில அமைப்பை துல்லியமாக கண் காணித்து, தரமான புகைப்படத்தை அனுப்பும் திறன் உடையது. இதற்காக இந்த செயற்கைகோளில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனன.
அவற்றைக் கொண்டு நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்களை சிறப் பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.