52 நாள் ஸ்டிரைக் வாபஸ்... என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்
சென்னை: சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
என்.எல்.சி., நிறுவனத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 3ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் வேலை நிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் நேற்று சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நல துணை முதன்மை ஆணையர் கந்தசாமி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
என்.எல்.சி., மனிதவளத்துறை முதன்மை பொதுமேலாளர் முத்து, பொது மேலாளர் பாலாஜி உள்ளிட்ட உயரதிகாரிகள், ஒருங்கிணைந்த ஒப்பந்த தொழிற்சங்கங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 சங்கங்கள், என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் பங்கேற்றனர். 7 மணி நேரத்திற்கு மேல் நீடித்த பேச்சுவார்தையின் போது ஊதியத்தை உயர்த்தி வழங்க என்.எல்.சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
இதுகுறித்து, என்.எல்.சி., பொதுமேலாளர் பாலாஜி கூறியதாவது:அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க., மற்றும் தொ.மு.ச., தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப திறன் அற்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 480 ரூபாய், பாதி தொழில் நுட்பத் திறனுடைய தொழிலாளர்களுக்கு, 500 ரூபாய், தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு, 515 ரூபாய் மற்றும் உயர் தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு, 525 ரூபாய் என, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, போனசாக ரூ. 3,500, உதவித் தொகையாக, 3,500 மற்றும் கருணைத்தொகையாக, 3000 என, 10 ஆயிரம் ரூபாய், 27ம் தேதிக்குள் பணிக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த உயர்த்தப்பட்ட புதிய நிதி பயன்கள், நவம்பரில், 50 சதவீதம் மற்றும், 2015 நவம்பரில், 50 சதவீதம் என, இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பொது மேலாளர் பாலாஜி தெரிவித்தார்.
இதனையடுத்து 52 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை திரும்ப பெற்று நள்ளிரவு முதலே பணிக்கு திரும்பினர்.