தோல்வியில் முடிந்தது 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. தொடர்கிறது என்எல்சி ஸ்டிரைக்
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த காரணத்தினால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி என்.எல்.சியின் நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், நெய்வேலியில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இரவு 10 மணி முதல் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளனர். மேலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மண்டல தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், என்.எல்.சி நிர்வாகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கேற்ற இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.