ஜிஎஸ்டியால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பே கிடையாது.. வெங்கய்யா நாயுடு 'ஒரே போடு'
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய மைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை: மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஒழுங்காக வரி கட்டாதவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த விளக்கக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீத்தாரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ''ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை மக்களும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக பயன் அடைவார்கள்.
ஆனால் யாரெல்லாம் ஒழுங்காக வரி கட்டும் பழக்கம் இல்லாதவர்களோ அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என கூறினார். அதேவேளையில் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தி எனப்படும் ஜிடிபி அதிகரிக்கும் எனவும் கூறினார்.
ஆனால் கடந்த நவம்பர் 8ஆம் தேதி மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு நாட்டின் ஜிடிபி 6.1 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஐந்தாண்டுகளில் மிகக் குறைவான ஜிடிபி என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால், அது இன்னும் குறையும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.