தஞ்சைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராது.. திமுக கேள்விக்கு முதல்வர் திட்டவட்ட பதில்
தஞ்சை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக திமுக எம்எல்ஏ நேரு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டாலும் அதனை தமிழக அரசு வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, பெருந்துறை ஆகிய 5 இடங்களில் மத்திய அரசு எதை தேர்வு செய்தாலும் தமிழக அரசு வரவேற்கும் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக முதல்வர் பழனிச்சாமி பதில் அளிக்கையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சாதகமாக இருந்ததால் தஞ்சை செங்கிப்பட்டியை தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அதனை மத்திய குழு நிராகரித்து விட்டது என்று முதல்வர் தெரிவித்தார்.
எனவே, தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.