கள்ளத்தொடர்பு வைத்துள்ள மாஜி மனைவிக்கு ஜீவனாம்சம் பெறத் தகுதியில்லை.. அதிரடி தீர்ப்பு
மதுரை: மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ள முன்னாள் மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அரசு ஊழியர் ஒருவர் விவாகரத்திற்குப் பின் தனது மனைவிக்கு மாதம் ரூ. 1000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அதில் ‘கடந்த 2011ம் ஆண்டு தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டதால் விவாகரத்து செய்ததாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இவ்வாறு கள்ளத் தொடர்பு காரணமாக விவாகரத்து வாங்கியவர்கள் தங்கள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை' என தீர்ப்பளித்தார்.
அதாவது, விவாகரத்திற்குப் பின் தனித்து வாழும் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் தருவது கணவர்களின் கடமை. ஆனால், மற்றொரு ஆணுடன் இணைந்து வாழும் பெண்களுக்கு அது பொருந்தாது. அந்தப் பெண்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது அப்போது அவர்களுடன் சேர்ந்து வாழும் ஆணே தவிர, முன்னாள் கணவரின் கடமையல்ல' என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.