குழந்தையில்லாத விரக்தி... வேலூரில் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை
வேலூர்: வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்-ப்ரியா தம்பதி. இவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ரியாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ப்ரியாவுகுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளாராம். இதனால் விரக்தியில் இருந்த வெங்கடேஷ், ப்ரியா ஆகிய இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான், வெங்கடேஷ், ப்ரியா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை இல்லாததாலேயே இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.