'ஆபரேஷன் தலாஷ்'.. மாயமான ராணுவ விமானத்தை தேடும் பணி 300 கடல் மைல் தொலைவுக்கு விரிவாக்கம்
சென்னை: தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்றபோது மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 வகை விமானத்தை தேடும் பணிக்கு ஆபரேசன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இன்னமும், விமானம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும், கடலோர காவல்படை ஐ.ஜி.ராஜன் பர்ஹோத்ரா தெரிவித்தார்.
கடலோர காவல்படை ஐ.ஜி. ராஜன் பர்ஹோத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை முதல் அந்தமான் வரை மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. சென்னையிலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தேடும் பணி நடந்து வருகிறது.
கடலில் எதுவும் கிடைக்காததால், தேடும் பணியை 300 கடல் மைல் தொலைவு தூரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துப்பு கிடைக்கவில்லை
காணாமல் போன விமானத்தை தேடும் பணி 4வது நாளாக நடந்து வருகின்றபோதிலும் கூட, விமானம் குறித்தோ, வீரர்கள் குறித்தோ எந்த தடயமும் கிடைக்கவில்லை. விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இணைந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோ உதவி
விமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ உள்ளிட்ட அரசு அமைப்புகள் உதவி வருகின்றன. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பொருள் விமானத்தின் பாகம் அல்ல. அது, மீனவ படகின் உதிரி பாகம் என தெரியவந்துள்ளது.
வானிலை பாதிப்பு
தேடுதல் பணிக்கு வானிலை சாதகமாக இல்லை என்பதும் தேடுதல் பணி தாமதமாக காரணம். விமானம் குறித்து அனைத்து சரக்கு கப்பல்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கடலுக்கடியில் விமானத்தை தேடும் பணி நாளை துவங்கும்.
ஆபரேஷன் தலாஷ்
விமானத்தை தேடுவதற்கான சாதனங்கள் நம்மிடம் உள்ளன. விமானத்தை தேடும் பணிக்கு 'ஆபரேஷன் தலாஷ்' என பெயரிடப்பட்டுள்ளது என்றார்.
புகார் பதிவு
தாம்பரம் விமானபடை விங் கமாண்டர் ஜெகதீப்சிங் நேற்று முன்தினம் இரவு சேலையூர் காவல் சரக உதவி ஆணையர் பழனிவேலை சந்தித்து விமானம் மாயமானது குறித்தும் இதில் பயணித்த 29 பேரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் புகாராக கொடுத்துள்ளார். இப்படி புகார் பதிவு செய்வது வழக்கமான நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.