முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் நீடிக்கிறது: உம்மன் சாண்டி
கோவை: முல்லைப் பெரியாறு அணையின் பழைமையான தொழில்நுட்பமே அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஓணம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து அதிகப்படியான காய்கறிகளை கேரளா அரசு பெற்றுவருகிறது. பூச்சிகொல்லி மருந்து தொடர்பான பிரச்னை குறித்து தமிழக அதிகாரிகளுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும்.
முல்லைப் பெரியாறு அணை, தமிழகத்தின் 5 மாவட்ட பாசனத்துக்கு உயிர்நாடியாக உள்ளது. ஆகையால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கி வரும் நீரின் அளவு ஒரு போதும் குறையாது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போதும் தமிழகத்துக்கான நீரின் அளவு குறையாது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பழமையான தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கிறது.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.