ஹைட்ரோ கார்பன் வேண்டாம்.. தீவிரமடையும் போராட்டம்.. நெடுவாசலைக் காக்க குழந்தைகள், பெண்கள் அணிவகுப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசலில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கிராமத்தைக் காப்பாற்ற பெண்கள், குழந்தைகள் என களத்தில் குதித்துள்ளனர்.
புதுக்கோட்டை: இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பனை பூமியில் இருந்து எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தமிழகம் முழுவதும் உருவாகியுள்ளது.
கடந்த 11 நாட்களாக புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், கையெழுத்துப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல வகைகளில் தங்களது எதிர்ப்புகளை கிராமத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசலை சுற்றி இருக்கும் 70க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தொடர் போராட்டம்
அமைதியாக இதுவரை நடைபெற்று வந்த போராட்டம், கட்டுக் கோப்புடன் எப்படி இனியும் தொடர்வது என்பது குறித்த ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், நாளை மறுதினம் போராட்டக்காரர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளனர். அப்போது என்னென்ன கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை முடிவில் எடுக்கப்பட உள்ளது.
சீமான் ஆதரவு
இந்தப் போராட்டத்திற்கு மதிமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெடுவாசலுக்கு வந்து மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளார்.
மநகூ தலைவர்கள்
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த மூன்று தலைவர்களும் கூட்டாக நெடுவாசலுக்கு சென்று மக்களுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.
அரசியல் சாயம்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் அறவழியிலானது. இதில் எந்த ஒரு ஜாதி, மதம், அரசியல் கட்சியின் சாயம் பட்டுவிடக் கூடாது என்பதில் நெடுவாசல் மக்கள் உஷாராக உள்ளனர். இந்தப் போராட்டத்தில் யார் கலந்து கொண்டாலும், கட்சிப் பெயரை சொல்லி போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.