ஈபிஎஸ் அணி எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துகிறது.. அவமானப்படுத்துகிறது.. செம்மலை குமுறல்
ஈபிஎஸ் அணி எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துகிறார்கள் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள செம்மலை எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஈபிஎஸ் அணியினர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று ஓபிஎஸ் டீம் செம்மலை கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் செம்மலை கூறியதாவது: அதிமுக அம்மா அணியினர் எங்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்துகிறார்கள்.
இரு அணிகள் இணைப்பு என்பது சவாலாகவே இருந்தது. இந்த நிலைமையை உருவாக்கியவர்கள் அந்த அணியினர்.
வேடிக்கை பார்க்கிறோம்
எதிர் அணியில் இருப்பவர்கள் தனித்தனியாக பேட்டிக் கொடுத்துக் கொண்டு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணியில் நடந்து கொண்டிருக்கின்ற குழப்பங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
உறுதியான நிலைப்பாடு
ஓபிஎஸ், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை எங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
சகோதரமனப்பான்மை இல்லை
நாங்கள் இணைய இருக்கின்றோம். சகோதர மனப்பான்மையோடு இருக்கின்றோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.
புறக்கணிப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வெளியில் ஒன்று சொல்வதும், செயல்படுத்துவது வேறாகவும் இருக்கிறது.