மருமகள் வாயில் விஷத்தை ஊற்றி விட்டு மகனுடன் பேச அனுமதி... உங்க டிசைனே புரியலையே மாமியார்ஜி!
சென்னை: லாஜிக்கா அப்டினா என்ன விலை எனக் கேட்கும் சீரியல்களில் வம்சம் சீரியலுக்கு தாராளமாக முதல் இடத்தைத் தரலாம்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அடுத்தடுத்து காட்சிகள் வரும். நாமும் கேள்வி கேட்காமல் அவற்றைப் பார்த்து ரசிக்க வேண்டும். இஷ்டத்திற்கு சீன் வைக்கிறார்கள்.. ஜவ்வாக இழுத்துச் செல்கிறார்கள்.
அட அதில், சீரியசான சில காட்சிகளைக் கூட சிரிப்பு போலீஸ் ரேஞ்சுக்குத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது என்றால் பார்த்துக்குங்களேன்.
காதல் திருமணம்...
அப்படித்தான் நேற்றும் ஒரு காட்சி. குடும்பத்திற்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையின் பேத்தியான தேவிகாவைத் திருமணம் செய்து கொள்கிறார் பணக்காரர் ஒருவர்.
தாயாரின் திட்டம்...
ஆனால், அவரின் தாயாரோ தனது தம்பி மகளுக்கு மகனைத் திருமணம் செய்து வைக்க பேசி முடித்து விடுகிறார். பிறகு தான் தெரிகிறது தனது மகனின் காதல் திருமணம் குறித்து.
அதிரடி பிரவேசம்...
பேருக்கு இரண்டு அடியாட்களுடன் மகன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைகிறார். வழக்கம்போல தேவிகா அவரிடம் கெஞ்சுகிறார்.
ஊத்துடா விஷத்தை...
ஆனால், அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத மாமியார், அடியாட்களின் உதவியுடன் மருமகளின் வாயில் விஷத்தை ஊற்றுகிறார். அந்த சமயத்தில் சரியாக அங்கு வந்து சேர்கிறார் மகன்.
என்ன அம்மா நீங்க...
மனைவியின் அலறலைக் கேட்டு கதவை உடைக்க முடியாமல், ஜன்னல் வழியாக விஷம் ஊற்றப்படும் காட்சியை லைவ்வாக பார்க்கிறார். அம்மாவை சகட்டுமேனிக்கு திட்டவும் செய்கிறார்.
உங்க டிசைனே புரியலையே...
அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட். மகனுடன் சேர்ந்து வாழக்கூடாது என கொலை செய்யும் அளவிற்கு சென்ற மாமியார், திடீரென ‘கடைசியா போய் அவன்கிட்ட பேசிட்டு வா' என மருமகளை அனுமதிக்கிறார்.
ஓவர்... ஓவர்...
அதனைத் தொடர்ந்து இருவரும் ஜன்னல் வழியாக சிறிது நேரம் அழுது நம் கண்களை வேர்க்க வைக்க முயற்சிக்கிறார்கள். பின்னர் டைம் முடிஞ்சது, எல்லாரும் அவங்கவங்க இடத்துக்கு வாங்க என மாமியார் ஆர்டர் போடுகிறார்.
அப்டியே ஷாக்காயிட்டேன்...
அதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் உள்ள மருமகளை, இறந்து விட்டார் எனக் கருதி காட்டில் போடச் சொல்லி விடுகிறார் மாமியார். அவ்வளவு நேரம் ஜன்னல் வழியாகக் கதறிக் கொண்டிருந்த மகன், கதவைத் திறந்து தான் வெளியே வருவார்கள் என்பதைக் கூட யோசிக்காமல், அவர்கள் சென்ற பின்னரும் கூட அதே இடத்தில் நின்று அழுது கொண்டிருக்கிறார்.
கதம்... கதம்...
பின்னர் ஆடி அசைந்து வாசல் கதவருகே வரும் மகன், பின் அங்கும் அமர்ந்து அழ மட்டுமே செய்கிறார். தப்பித்தவறிக்கூட மனைவியைக் காப்பாற்றிவிட வேண்டும் என எந்த முயற்சியும் அவர் எடுப்பதாகத் தெரியவில்லை.
யூ டூ...
பின்னர் இந்த பிளாஷ் பேக்கை அவர் சொல்லி முடித்ததும், அவர் கூடவே இருக்கும் அவரது உதவியாளர் மீதிக் கதையைத் தொடர்கிறார். ( அடப்பாவி இத்தனை வருசம் அவர்கூடத்தான இருந்த... இதை ஏன் முன்னாடியே சொல்லல)
எவ்ளோ பெரீய்ய பிளாஷ்பேக்...
எல்லா பிளாஷ்பேக்குகளும் முடிந்த பின்னர், ஒரு வழியாக தேவிகாவின் மகள் தான் பூமிகா என இயக்குநர் சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்து நம்மை நம்ப வைக்கிறார். இதுக்குத் தானா இவ்ளோ பெரிய பிளாஷ்பேக்னு நம்ம கதறுவது இயக்குநரின் காதுக்கு கேட்குமா எனத் தெரியவில்லை.
பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா...
ஆனாலும், சீரியஸ் வில்லிகளுக்கு மத்தியில் சிரிப்பு போலீசாக வளைய வரும் வம்சம் சீரியலை லாஜிக் இல்லாமல் பார்த்தால் ரசிக்கலாம். இல்லை பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என நீங்கள் அடம் பிடித்தால், வயிறு குலுங்க சிரிக்கலாம்.