சென்னையை போலவே மழையால் மிதக்கும் தூத்துக்குடியை கண்டுகொள்வார் இல்லையே?
மதுரை: சென்னையில் மழை பெய்து தண்ணீர் தேங்கும்போது தரும் முக்கியத்துவத்தை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தூத்துக்குடிக்கு தருவதில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 22ம் தேதி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தாமோதரன் நகர், ஐயப்பன் நகர், அந்தோணியார்புரம், அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, முத்தையா புரம், முள்ளக்காடு, முடுக்குகாடு, திருவிக நகர், இந்திரா நகர், தபால் தந்தி காலனி பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளம் முழுமையாக வடிவதற்குள் கடந்த 22ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் 23ம் தேதி அதிகாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்தன. காட்டாற்று வெள்ளம் நின்று 2 நாட்களாகியும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை.
இடுப்பளவு நீர்
புறநகர் பகுதிகளில் தேங்கிய மழை வெள்ளம் அனைத்தும் நகர்ப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் 3ம் மைல், பசும்பொன் நகர், முருகேசன் நகர், திரவியரத்தினம் நகர், மடத்தூர், ராஜீவ் நகர், சாந்தி நிகிலேசன் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், கணேஷ்நகர், மில்லர்புரம், அன்னை தெரசா நகர், ராஜகோபால் நகர், பால்பாண்டி நகர், அண்ணாநகர், குறிஞ்சி நகர், ஸ்டேட் பேங்க் காலனி பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
தொற்று நோய்
நாய், பன்றி போன்றவை இறந்து மிதப்பதாலும், குப்பைக் கூழங்கள், சாக்கடை கலந்திருப்பதாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடுப்பளவுக்கு மேல் நிற்கும் தண்ணீரை கடந்து வெளியே வரமுடியாமல் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சிறப்பு நிவாரண முகாம்களில் உள்ள மக்களும் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை.
ஊடகங்கள்
இருப்பினும் தூத்துக்குடி பற்றி எந்த ஒரு பிரபலமும் கவலை தெரிவிக்கவில்லை. காட்சி ஊடகங்கள் அதை கண் துடைப்பாக கண்டுகொள்வதோடு சரி. தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொடங்கியுள்ள காட்சி ஊடக நிறுவனங்கள் மட்டுமே கொஞ்சம், கவனிக்கின்றன.
பிரபலங்கள்
நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்கள் சென்னை மழையை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என கூறினர். ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி மழையை கண்டுகொள்ளவில்லை என அவரை போன்ற பிரபலங்களும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஏன் முக்கியத்துவம்
சென்னையில்தான், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடக தலைமையகங்கள், நடிகர், நடிகைகளின் வசிப்பிடங்கள் குவிந்துள்ளதாலும், அதிகப்படியான சட்டசபை தொகுதிகள் ஒரே இடத்தில் இருப்பதாலும்தான் சென்னைக்கு தனி மரியாதை தரப்படுகிறது என்பது தூத்துக்குடி போன்ற பிற மாவட்ட மக்களின் கருத்தாக உள்ளது. தூத்துக்குடி வெள்ளத்தை தொகுதி எம்.பி கூட பார்க்கவரவில்லை என நேற்றுதான் மக்கள் குமுறியிருந்தனர்.
சோஷியல் மீடியாவும்
சகசிட்டிசன்களும், சென்னை மூழ்குகிறது, சென்னை மழை, என்ற பெயர்களில் ஹேஷ்டேக்கை உருவாக்கி தேசிய மக்கள் கவனத்தை ஈர்த்தனர். ஆனால் தூத்துக்குடி பற்றி சமூக வலைத்தளங்கள்கூட கவலைப்படவில்லை என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டியது. சென்னைபோலவே, தூத்துக்குடியிலும் படகுசவாரிதான் நடப்பது பலருக்கும் தெரியவில்லை. நமக்குள்ளேயே இந்த ஏற்றத்தாழ்வு இருக்கும்போது, தேசிய ஊடகங்களை சொல்லி என்ன பயன்?