சசிகலாவை கேள்வி கேட்க அதிமுகவில் யாருக்கும் அதிகாரம் இல்லை.. சீறும் வெற்றிவேல் எம்எல்ஏ!
சசிகலாவை கேள்வி கேட்க அதிமுகவில் யாருக்கும் அதிகாரம் இல்லை என வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை கேள்வி கேட்க அதிமுகவில் யாருக்கும் அதிகாரம் இல்லை என அவரது தீவிர ஆதரவாளரான வெற்றி வெல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி அணியினர் டிடிவி தினகரன் தரப்பை சாடுவதும் தினகரன் தரப்பினர் எடப்பாடி அணியினர் குறை கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவை பொதுச் செயலாளராக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர் என்றனர்.
சசிகலாவை கேள்வி கேட்கும் அதிகாரம் அதிமுகவில் யாருக்கும் இல்லை என்றும் அவர் கூறினார். தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது என்றும் அவர் கூறினார்.
தொகுதி நலத்திட்டங்களை செய்ய தங்களை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிர்பந்தம் செய்வதாகவும் அவர் கூறினார். அசாதாரண சூழ்நிலையில் தான் தினகரனை துணை பொது செயலராக சசிகலா நியமித்தார் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து நெருக்கடி வருவதாக எடப்பாடி தரப்பினர் கூறுவதாகவும் அவர் கூறினார். அவர்கள் மீது கட்சி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். யார் வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்தார்.