சென்னை சந்தித்த மழைச் சிக்கல்கள்... ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சம் புகுந்த மாடு!
சென்னை: சென்னை இந்த மழை சீசனில் சந்தித்த சிக்கல்களைப் பற்றி பக்கம் பக்கமாக பேசலாம், எழுதலாம். அந்த அளவுக்கு மக்கள் சிரமப்பட்டு விட்டார்கள். ஏன் வட சென்னையில் பல பகுதிகளில் இன்னும் கூட வெள்ளம் வடிந்த பாடில்லை. வேளச்சேரியிலும் பல பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.
கிட்டத்தட்ட 2 வார கால அளவுக்கு மழை பெய்து விட்டது. இந்த மழையால் வழக்கமாக கிடைக்கும் மழை அளவை விட இரு மடங்கு மழையை சென்னை பெற்றுள்ளது.
தென் சென்னை கூட ஓரளவு இந்த மழை பாதிப்பை சமாளித்து விட்டது. ஆனால் வட சென்னைதான் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டது.
சாலைகளில் வெள்ளம்...
கொளத்தூர், முகப்பேர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் கூட மழை நீர் முழுமையாக வடியவில்லை. தெருக்களில் இன்னும் கூட நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. வாகனங்கள் பாதி மூழ்கிய நிலையில்தான் போகின்றன. முழங்கால் அளவுக்கு பல பகுதிகளில் தண்ணீர் நிற்கிறதாம்.
கரும் பாதிப்பு...
சர்ச் தெரு, திலக் தெரு, ஸ்பார்டன் அவென்யூ ஆகிய முகப்பேர் கிழக்குப் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. இருப்பினும் அவர்களுக்கு சென்னை மாநகராட்சியிலிருந்து சரிவர உதவிகள் வரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
குளம் தேங்கிய நீர்...
அதேபோல கொளத்தூர் செந்தில் நகரில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. காரணம் குளம் போல தேங்கிய மழை நீரில், கழிவு நீரும் கலந்ததால் மக்கள் நிலை பெரும் கஷ்டமாகி விட்டது.
கழிவு நீர் புகுந்தது...
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. கழிவு நீர் கலந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் சிரமத்தில் உள்ளனர் மக்கள். வெள்ள நீரை பம்ப் செய்து வெளியேற்ற மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
குப்பைமேடான மெரீனா பீச்...
இந்த மழையால் உலகின் அழகிய 2வது கடற்கரையான மெரீனா பீச் இப்போது குப்பைக் கூளமாகி விட்டது.. எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. கடற்கரையின் அழகே துவம்சமாகி விட்டது.
துர்நாற்றம்...
கூவம், அடையாறு ஆகிய ஆறுகளிலிருந்து வந்த குப்பைகளும், மெரீனா கடற்கரையில் வந்து குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மீனவர்களுக்கும் இது பெரும் சிரமத்தைக் கொடுக்கிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்...
இந்த குப்பைக் கூளத்தை அகற்ற யாரும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் களம் இறங்கி இந்த குப்பையை அகற்ற வேண்டும் போல.
ஏடிஎம்மில் மாடு...
சென்னை மக்கள் சந்தித்த மழையின் கொடுமையை இந்தப் படம் எளிதாக விளக்கும். இது ஒரு ஏடிஎம் சென்டர். இங்கு ஒரு மாடு வந்து மழைக்காக அடைகலம் புகுந்துள்ளது. இந்தப் படம் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.