தமிழுக்கு குரல் கொடுக்க என்னை விட்டால் யாருமில்லை: இல.கணேசன் 'செல்பி' புகழ்ச்சி!
திருச்சி: தமிழை மூன்றாவது மொழியாக கொண்டுவர வேண்டுமென குரல் கொடுக்க தமிழகத்தில் என்னை தவிர யாருக்கும் தகுதியில்லை என பா.ஜ.க தேசிய தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பேட்டியில், ''இதற்கு முன்பு இருந்ததைப் போல், மோடி தலைமையிலான ஆட்சியில், மீனவர்கள் யாரும் சித்ரவதை செய்யப்படவில்லை.
முதல் முறையாக தூக்கு தண்டனையிலிருந்து 5 மீனவர்களை மீட்டது மோடி தலைமையிலான ஆட்சிதான். மேலும் மீனவர்களின் படகுகளை விரைவில் பிரதமர் நரேந்திரமோடி மீட்டு மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பார்.
தருண் விஜய் அறிவித்தது போல் இந்தியா முழுவதிலும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும். அதனை தொடர்ந்து பாரதியார் தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகின்ற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பள்ளிகளில் கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசானது சமஸ்கிருதத்தை 3 ஆவது மொழியாக பள்ளி பாட பிரிவுகளில் கொண்டு வந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தமிழ் மொழியை 3வது மொழியாக சேர்க்க வேண்டும் என்கிறார்கள். இப்படி கூற தமிழகத்தில் என்னை தவிர எவருக்கும் தகுதி இல்லை" என்று காட்டமாக கூறியுள்ளார்.