அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது.. திருடவும் முடியாது: சசிகலா கணவர் நடராஜன் 'பரபர'
அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது என ம. நடராஜன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது... தனிநபர் கட்சியை திருடவும் முடியாது என்று ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே சசிகலா கணவர் ம. நடராஜன் பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவரை இழந்த சோகத்தில் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளன. ஆனால் அதிமுகவின் அதிகார மையங்களோ அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிவிட்டன.
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு சசிகலா நடராஜன் அளித்த 'எக்ஸ்குளூசிவ்' பேட்டியில் கூறியுள்ளதாவது:
அதிமுக தொடரும்...
அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித் தலைவரின் புகழும் புரட்சித் தலை அம்மாவின் புகழும் இருக்கும் வகையில் அண்ணா திமுக தொடரும். புரட்சித் தலைவரின் இரட்டை இலையும் புரட்சித் தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும்.
தீர்மானித்தது நாங்க...
நாங்க வந்து இதே இடத்தில் புரட்சித் தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் அப்படிங்கிறதை தேர்வு செய்யுறதல மிக முக்கியமான தலைவர்கள்... அவங்க பேர்ல எல்லாம் சொன்னா லேட்டாகும் வெவ்வேற இடத்துல இருக்காங்க.. அந்த தலைவர்கள் எல்லாம் சேர்ந்து... இந்த கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய தகுதி தாய்ந்தவர் யார்? என்று தீர்மானிக்கிற இடத்துல நாங்க எல்லாம் அப்ப இருந்தோம்...
ஜெ.தான் என்றோம்...
அப்போது 25 வருடத்துக்கு அதிமுக என்ற புரட்சித் தலைவருடைய அந்த தீபத்தை ஒளிவிளக்கை ஏந்தும் தகுதி ஒரே ஒருவர் புரட்சித் தலைவி அவர்கள்தான் என்று நாங்கள் அப்போது முடிவு செய்தோம்.
தனிநபர் திருட முடியாது...
அதைவிட தாண்டி 28 ஆண்டுகாலம் இந்த கட்சியை வழிநடத்தி எம்ஜிஆர் உருவாக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுவந்துவிட்டார். இப்போது திராவிட இயக்க ஆட்சியும் 50 ஆண்டுகாலம் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், புரட்சித் தலைவி என்கிற 4 பேரின் சகாப்தம் என்றும் தொடரும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,. புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் போட்ட விதையை எந்த ஒரு தனிநபராலும் திருடிவிட முடியாது.
அதிமுக நீடிக்கும்...
அந்த இரட்டை இலையையும் அண்ணா திமுக என்ற கட்சியும் இன்னும் பல ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதை வீழ்த்துவதற்கு வெளியில் இருந்து யாரும் இல்லை. சாதாரண கடைநிலையில் இருக்கிற தொண்டன் கூட இக்கட்சியை கொண்டு செல்ல முடியும். அப்படிப்பட்ட அடித்தளத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தியாவில் உலகத்தில் இருக்கிறதா? கடைநிலைத் தொண்டன் இருக்கும் வரை இந்த கட்சி தொடரும்.
இவ்வாறு ம. நடராஜன் கூறினார்.
ஆசீர்வாதம் ஆச்சாரி
இப்பேட்டியளித்த போது பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் சீடரான ஆசீர்வாதம் ஆச்சாரி ம. நடராஜனுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.