கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய்க்கிணறு பராமரிப்பு பணிதான் நடைபெறுகிறது.. ஓஎன்ஜிசி விளக்கம்!
கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய்க் கிணறு பராமரிப்பு பணியை தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தஞ்சை: கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய்க் கிணறு பராமரிப்பு பணியை தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கதிராங்கலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள், தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் கூறியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறு அமைத்தது. இந்நிலையில் அந்த குழாய்களை அகற்றி மராமத்து பணிகளை ஒஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதேநேரத்தில் ஓஎன்ஜிசி சார்பில் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கான ஆய்வு தொடங்க இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கடந்த மே 19 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து, புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
ஓஎன்ஜிசி மறுப்பு
ஆனால் இதனை மறுத்த ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமில்லை என கூறியது. வெறும் பராமரிப்பு பணிதான் நடைபெறுவதாக விளக்கமளித்தது.
தொடர் போராட்டம்
ஆனால், அங்கு தொடர்ந்து பணிகள் நடைபெறுவதும், ஆழ்குழாய்கள் பதிக்கப்படுவதும் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் கதிராமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
உற்பத்தி ஆய்வைத் தவிர
இந்நிலையில் இதுகுறித்து ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கதிராமங்கலம் கிராமத்தில் உற்பத்தி ஆய்வைத் தவிர வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல்கள் ஆதாரமற்றவை
மேலும் கதிராங்கலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள், தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் கூறியுள்ளது. பராமரிப்பு பணிகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
இதனால் குடிநீருக்கோ நிலத்தடி நீர்மட்டத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் கூறியுள்ளது. பராமரிப்பு பணிக்கு தமிழகம் மற்றும் டெல்டா மக்கள் ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.