திமுகவில் சேரும் திட்டமில்லை… முரசொலி விழாவில் கமல் சூசகம்
திமுகவில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என்று நடிகர் கமல் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியின் 75வது ஆண்டு பவள விழா நிகழ்வில் நடிகர் கமல் பங்கேற்றுப் பேசினார். அதில் திமுகவில் சேரும் திட்டம் இல்லை என்பதைச் சூசகமாக தெரிவித்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.
ரஜினியுடன் அமர திட்டம்
இறுதியாக நடிகர் கமல் ஹாசன் பேசியதாவது: நான் கருணாநிதியின் நீண்ட கால ரசிகனாக இருந்து வருகிறேன். இந்த விழா மேடையின் கீழே ரஜினியுடன் அமரத்தான் முதலில் திட்டமிட்டேன்.
தன்மானமே முக்கியம்
ஆனால் விழா மேடையில் அமரக் கிடைத்த மாபெரும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதற்காகவே மேடைக்கு வந்தேன். தற்காப்பு முக்கியமில்லை. தன்மானம்தான் முக்கியம்.
நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது
நான் இந்தக் கட்சியில் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால் 1983ம் ஆண்டே இணைந்திருப்பேன். அந்த ஆண்டு கருணாநிதியிடம் இருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. அதில், நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது என அவர் கேட்டிருந்தார். அந்தத் தந்தியை பார்த்த பின் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
முரசொலி மேடையிலும் அதே மரியாதை
இன்று வரை நான் கருணாநிதியின் கேள்விக்குப் பதில் சொல்லவேயில்லை. அவரது பெருந்தன்மை என்னவென்றால் இதுவரை அதுகுறித்து என்னிடம் கேட்கவே இல்லை. அதே மரியாதை இந்த மேடையிலும் எனக்குக் கிடைக்கும் என்பதால்தான் மேடைக்கு வந்தேன் என்று கமல் கூறினார்.