அதெல்லாம் தினகரனுக்கு யாரும் ஒரு நெருக்கடியும் தரலை.. தம்பிதுரை
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீதான புகாரால் அவருக்கு அமைச்சர்கள் யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது எழுந்துள்ள புகாரால் அவருக்கு அமைச்சர்கள் யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிப்பதற்காக டெல்லியில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா ரூ.1.30 கோடி ரொக்கம் அளிக்கப்பட்டதை அறிந்த போலீஸார் சுகேஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் வசமாக சிக்கியுள்ளார்.
அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்துள்ளது. அவரை விசாரணைக்குப் பின்னர் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலையும் நிலவுகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை தெரிவிக்கையில், கட்சியில் எந்த பிளவும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகதான் உள்ளோம்.
மேலும் டிடிவி தினகரனை ஓரங்கட்ட அமைச்சர்கள் எந்த நெருக்கடியும் தரவில்லை; ஆட்சி சீராக உள்ளது என்றார் தம்பித்துரை.