ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் உருவபொம்மையை கொளுத்துவோம்- மிரட்டும் ரசிகர்கள்- வீடியோ!
சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தினர் 'ரஜினி குறித்து விமர்சனம் சொன்னாலோ அல்லது ரஜினிக்கு எதிரான கருத்துக்களைக் கூறினாலோ அவர்கள் வீட்டு முன்பு உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என கூறியுள்ளனர்.
சேலம்: ரஜினிக்கு எதிராக கருத்து சொன்னாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ அந்த அரசியல் தலைவர்களின் உருவ பொம்மையை அவர்கள் வீட்டு முன்பு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மாவட்ட வாரியாக ரசிகர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அரசியலில் நுழைவது குறித்து, 'போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்' என சூசகமாகத் தெரிவித்தார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு அரசியல்கட்சி தலைவர்களும் ரஜினி குறித்து ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ரஜினிக்காக பாஜக கதவு திறந்தே இருக்கும் என்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ரஜினி தேசியக் கட்சிகளில் சேரக் கூடாது புதுக் கட்சி தொடங்க வேண்டும் என்றார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானோ ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது. தமிழர்களை தமிழர்களே ஆண்டுகொள்கிறோம் என்றார். அதையெல்லாம் விட முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் நெட்டீசன்கள் ரஜினியின் அரசியல் வருகையை நையாண்டி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரஜினி குறித்து விமர்சனம் சொன்னாலோ அல்லது ரஜினிக்கு எதிரான கருத்துக்களைக் கூறினாலோ அவர்கள் வீட்டு முன்பு உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளார்கள்.
ரஜினி, இணையத்தில் தமிழர்கள் ஏன் என்னைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுகிறார்கள் என கேட்டார். பின்பு அவரையே பச்சைத் தமிழன் என்று சொல்லிக்கொண்டார். ரஜினியின் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்று இப்போதே மக்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.