அரசியல் ரீதியாக மோடியுடன் பேசவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
பிரதமரை அரசு திட்டங்களுக்காக சந்தித்தேனே தவிர அரசியலுக்காக சந்திக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: பிரதமரை தான் சந்தித்தது அரசு திட்டங்களுக்காகவே தவிர அரசியல் குறித்து பேசுவதற்கு அல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டார்.
இன்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை மனுக்களை அளித்து விட்டு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.17,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
பம்பா, அச்சன்கோவில் ஆகிய ஆறுகளில் இருந்து உபரியாக செல்லும் நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை சட்டசபையில் திறக்க அனுமதிக்க வேண்டும்.
வரும் டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தேன. ஜனாதிபதி தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்பது குறித்து மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வர் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.