படித்து பல வருடம் ஆகிறது ... இன்னும் கிடைக்கவில்லை உதவி தொகை... நெல்லை மாணவர்கள் குமுறல்
படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று நெல்லை மாணவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை: மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை படித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் வழங்கப்பட வில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 5 ஆயிரம் கல்வி உதவி தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 10-ஆம் வகுப்பு படிக்கும் போது ரூ.1500-ம், 11-ஆம் வகுப்பில் ரூ.1500, 12-ஆம் வகுப்பில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முக்கூடல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த 15 பேருக்கு உதவி தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாணவ, மாணவிகள் கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் சரியான பதில் இல்லை. இதையடுத்து தங்களது வங்கி கணக்கு மற்றும் பெயரை எழுதி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினர்.
அதற்கு 15-6-2016ல் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராஜ் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அவர் பதில் அளித்து ஓர் ஆண்டு ஆகியும் இதுவரை மாணவர்களது வங்கி கணக்குக்கு உதவி பணம் வந்து சேரவில்லை.
படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்திலும், கோபத்திலும் உள்ளனர்.