ரகசியக் கூட்டமா... எம்எல்ஏக்களா.. இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் அமைச்சர் செங்கோட்டையன்!
அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக வெளியான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக வெளியான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் யாரும் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஏற்கனவே தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, தீபா பேரவை, ஈபிஎஸ் அணி என சிதைந்து கிடக்கிறது. இதில் ஈபிஎஸ் அணியையும் ஓபிஎஸ் அணியையும் இணைப்பதற்கான பேச்சு வார்த்தையே இதோ அதோ என இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் ஈபிஎஸ் அணியின் எம்எல்ஏக்கள் 25 பேர் சென்னையில் நேற்று ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் அதிமுக 5 கோஷ்டிகளாக உடைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
செங்கோட்டையன் மறுப்பு
இந்நிலையில் அதிமுகவில் உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் சென்னையில் ரகியமாக கூடி ஆலோசனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் அதனை மறுத்தார்.
முற்றிலும் பொய்யானது
அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் செங்கோட்டையன் கூறினார். ஆட்சியையும், கட்சியையும் காப்பதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரே அணியில் இருந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் மட்டுமே பேசனும்
அதிமுக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக குழுவில் இடம்பெற்றுள்ள யாராவது ஒருவர் மட்டுமே கருத்துகளை வெளியிட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜெயக்குமாரும் மறுப்பு
இதேபோல் அமைச்சர் ஜெயக்குமாரும் ஏம்எல்ஏக்களின் ரகசிய கூட்டம் குறித்து வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதுபோல் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.