அதெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு தனி "கியூ" கிடையாது... லக்கானி கறார்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, நடிகர், நடிகைகளுக்கு என தனி வரிசை அமைக்கப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. பொதுமக்களுடன் சினிமா பிரபலங்களும் வாக்களிக்க வரும்போது, அவர்களைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடும். இதனால் வாக்குச்சாவடிகளில் பரபரப்பு ஏற்படும். எனவே, சினிமா பிரபலங்கள் விரைவில் வாக்களிக்க வசதியாக தனி வரிசை அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "தமிழகத்தில் மே 16ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்போட வரும் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசையோ அல்லது அவர்கள் வந்தவுடன் நேராக சென்று வாக்களிக்கவோ அனுமதி கிடையாது.
பொதுமக்களுடன் வரிசையில் நின்றுதான் நடிகர் நடிகைகள் வாக்களிக்க வேண்டும். அதேநேரம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க தேவையில்லை. நேராக உள்ளே சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படும்" என்றார்.