தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேசவில்லை… அது பொய் செய்தி: கருணாநிதி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அத்தகைய செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்புகிறார். எனவே மேற்கு, வட மாவட்டங்களில் அதிமுகவை அட்டாக் செய்ய பாமக அல்லது தேமுதிகவை கூட்டணியாக இணைக்க கருணாநிதி விரும்புகிறார். இதற்காக தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், தேமுதிக 90 இடங்களைக் கேட்டதாகவும், அதற்கு திமுக மறுத்துவிட்டதாகவும், இறுதியில் 70 இடங்களை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திமுக யோசனையில் இருக்கவே திமுகவினரின் குடும்ப திருமண விழாவில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார். தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் திமுக இதுவரை ஈடுபடவில்லை என்றும் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தங்களுக்கு 90 இடங்கள் வேண்டுமென்று திமுகவிடம் வலியுறுத்துவதாகவும், அதனால் திமுகவின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு செய்தியை, அது முழுப் பொய் என்று தெரிந்தே, மனசாட்சியைக் கட்டிப் போட்டு விட்டு, இட்டுக்கட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாமென்று திமுகவினரும் பொதுமக்களும் இந்தச் செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.