For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் கூட்டணி கிடையாது: வைகோவைத் தொடர்ந்து ராமதாஸும் திட்டவட்ட அறிவிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்ததைப் போலவே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமது இல்ல திருமண அழைப்பிதழைக் கொடுக்க திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசினார் ராமதாஸ். இதனைத் தொடர்ந்து பாமகவும் திமுகவும் நெருங்கி வருவதாகக் கூறப்பட்டது.

No Truck with DMK: Ramadoss

மேலும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்தினார் கருணாநிதி. அப்போது கருணாநிதியும் ராமதாஸும் பரஸ்பரம் புகழாரம் சூட்டிக் கொண்டனர்.

இதனால் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவும் உறுதியாக இடம்பெறும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் பேசிய செயற்குழு உறுப்பினர்கள், பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவித்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இறுதியாக டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

ஊழல் என்ற 3 எழுத்து தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் மீது இருந்த பல்வேறு வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசாரணையின்போதே கைவிடப்பட்டு இருக்கிறது.

மணல் கொள்ளையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு ஊழல் செய்து இருக்கிறது. சத்துணவு அமைப்பாளர் பொறுப்புக்கு ரூ.2.5 லட்சம், துணைவேந்தர் பதவிக்கு பல கோடி என்று கொள்ளையடிக்கிறார்கள்.

.அ.தி.மு.க.விற்கு நாங்கள் ஊ.தி.மு.க. என்று பெயர் சூட்டுகிறோம். அதாவது ஊழல் தி.மு.க.. அ.தி.மு.க.வை குறை சொல்வதால் தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள்.

இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க.வுக்கு மட்டும் தான். ஆகவே இந்த இரண்டு ஊழல் கட்சிகளையுமே நாம் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது.

2016-ல் பா.ம.க. ஆட்சி அமையும். இதை நம்மை தவிர வேறு யார் சொன்னாலும் அது வெற்று கோஷமாக தான் இருக்கும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ம.க. நிரப்பும். அதற்கான வாய்ப்பு நமக்கு மட்டும் தான் இருக்கிறது. 50 ஆண்டுகால திராவிட ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. அதற்காக நாம் அமைக்க இருப்பது 3-வது அணி அல்ல, மாற்று அணி என்றார்,

மதிமுகவைத் தொடர்ந்து..

தற்போது திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் திமுகவுடன் நெருக்கம் காட்டிய மதிமுக பொதுச்செயலர் வைகோவும் திடீரென திமுகவுடன் கூட்டணியே இல்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Ruling out any tie-up with the DMK, Pattali Makkal Katchi (PMK) founder S Ramadoss on Thursday said that his party would form an alliance that will be an alternative to both the AIADMK and DMK, for the 2016 Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X