அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் இல்லை - ஏ.வ. வேலு
அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சரும் திமுக எம்எம்ஏவுமான ஏ.வ. வேலு கூறியுள்ளார்.
சென்னை: தினசரியும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வரும் நிலையில் அம்மா பெட்ரோல் பங்குகளினால் எந்த பயனும் ஏற்படாது என்று முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று உணவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாசித்தார். அதில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னையில் நந்தனம், தஞ்சை இரும்புத்தலை, திருவாரூர் சுந்தரக் கோட்டை, வேலூர் வாணியம்படி, நாகை கோவில்பத்து, மதுரை கப்பலூர், விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக அம்மா பெட்ரோல் நிலையங்களையை அறிவித்துள்ளார் அமைச்சர் காமராஜ்.
இதனிடையே இது குறித்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு, அம்மா பெட்ரோல் நிலையங்களினால் எந்த பயனும் இல்லை என்று கூறினார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் நிறுவனங்களே விலைநிர்ணயம் செய்யும் நிலையில் அம்மா பெட்ரோல் பங்குகளால் எந்த பயனும் இல்லை என்றும் கூறினார்.