யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் - கடலூரில் கர்ஜித்த எடப்பாடி பழனிச்சாமி
கடலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மரம் காற்று கதை சொல்லி தொண்டர்களுக்கு ஒற்றுமையை உணர்த்தினார்.
சென்னை: நான் என்ற மமதையுடன் இருந்தவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கதை சொல்லி தொண்டர்களுக்கு ஒற்றுமையை புரியவைத்தார். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிமுகவின் 3 அணிகளுமே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக அம்மா அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூர் பெண்களுக்கு பெருமை
மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கடலூரில் தொடங்கியது. கடலூர் பெண்கள் வீரமும் விவேகமும் கொண்டவர்கள் என்று பாராட்டினார்.
எம்ஜிஆர் பாடலை பாடிய எடப்பாடி
எம்ஜிஆர் ஒரு நடிகராக மட்டுமல்ல சிறந்த தலைவராகவும் திகழ்ந்தார். அவருடைய திரைப்படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் அளித்திருப்பார் என்று கூறி அடிமைப்பெண் படத்தின் பாடலான தாயில்லாமல் நானில்லை என்ற பாடலை வாசித்தார்.
விவசாயிகள் நலன்
கடலூர் மக்கள் தென்றலை அனுபவிப்பது போல புயலையும் எதிர்கொள்வார்கள். விவசாயிகள் அதிகம் நிறைந்த கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை தரும் அரசு அதிமுக அரசு.
ஆணவத்தின் கதை
பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நான் என்ற மமதையுடன் இருந்தவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆணவம் இருந்தால் மொட்டை மரமாகத்தான் ஆக வேண்டும் என்று மரம், காற்று கதையை சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.
கல்விக்கு அதிக நிதி
இந்தியாவிலேயே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது தமிழகம்தான். கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கியதால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்வியில் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா
யாருக்கும் அஞ்சமாட்டோம்
யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். அதிமுக ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்று கூக்குரல் போடுகிறார்கள். கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறம் வழியாக யாரையும் வர விட மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.