நாங்கள் ஏன் இந்தியை படிக்க வேண்டும்.. மத்திய அரசின் முடிவுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு
கேந்திர வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் முடிவிற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதற்கட்டமாக, சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்தி எதிர்ப்பு பூமியான தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு வங்காளம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தி எதிர்ப்புப் போர்
திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்தி திணிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களிலும் அரசு விளம்பரங்களிலும் இந்தியை மத்திய அரசு திணித்துள்ளது. ஆசிரியர் தினத்தை குரு பூர்ணிமா என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம்" என்று ஸ்டாலின் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் கொள்கை
மேற்கு வங்காளத்திலும் இந்தி திணிப்பிற்கு திரிணாமுல் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் சவுகடா ராய், இந்தி, இந்து, இந்துஸ்தான் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கையை இந்தியா முழுவதற்கும் நடைமுறை படுத்துவதற்கான வேலையை பாஜக செய்து வருகிறது என்று கடுமையாக கண்டித்துள்ளார்.
எச்சரிக்கை
மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவதற்கு முன்னர், பாஜக நன்றாக யோசித்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் சவுகடா ராய் எச்சரித்துள்ளார்.
அவசரச் சட்டம்
இதனிடையே, கேரளா அரசு ஏப்ரல் 11ம் தேதி அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மும்மொழி கொள்கை இருந்த போதிலும் மலையாளத்தை கட்டாயமாக்கி சட்டம் இயற்றியுள்ளது கேரள அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
எதுக்கு இந்தி?
வட மாநில மக்கள் தென்னிந்திய மொழிகளை கற்க முயற்சி கூட செய்யாத போது, எங்கள் குழந்தைகள் மட்டும் ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்று தெலுங்கானா மாநிலத்தின் கல்வித் துறை கேள்வி எழுப்பியுள்ளது.