ரிகர்சலில் அவ்வளவு சொல்லியும் காலில் விழவா செய்றீங்க: செல்லூர் ராஜு மீது ஜெ. கோபம்
சென்னை: பதவியேற்பு விழாவின்போது மேடையில் யாரும் தனது காலில் விழக் கூடாது என்று கூறியும் அமைச்சர் செல்லூர் ராஜு காலில் விழுந்ததால் முதல்வர் ஜெயலலிதா அவர் மீது கோபத்தில் உள்ளாராம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெயலலிதா 6வது முறையாக நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்து பதவியேற்றார்.
பயிற்சி
பதவியேற்பு விழாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நேற்று முன்தினம் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் யாரும் என் காலில் விழக் கூடாது என்று ஜெயலலிதா பயிற்சியின்போது கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜு
பயிற்சியின்போது ஜெயலலிதா அவ்வளவு சொல்லியும் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மேடையில் அம்மாவின் காலில் விழுந்துவிட்டார். அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்துவிட்டாரே என ஜெயலலிதாவுக்கு அவர் மீது கோபம் வந்துவிட்டது.
ஜெயலலிதா
செல்லூர் ராஜு காலில் விழுந்தவுடன் ஜெயலலிதாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை புரிந்து கொண்ட மற்றவர்கள் காலில் விழாமல் லேசாக குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். அமைச்சர்கள் தனது காலில் விழுவதை பார்த்து பிறர் முகம் சுளிப்பதை தடுக்கவே ஜெயலலிதா அவ்வாறு ஒரு உத்தரவை போட்டாராம்.
கட்அவுட்
பதவியேற்பு விழாவில் பங்கேற்க தான் சென்னை பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது வழியில் பேனர்கள், கட்அவுட்டுகள் எதுவும் வைக்கக் கூடாது என்று ஜெயலிலதா அதிமுகவினருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று பேனர், கட்அவுட்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.