முழு நேர ஊழியர்களாக அறிவிக்கக் கோரி போராட்டம்... சத்துணவு ஊழியர்கள் கைது
முழு நேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
திருநெல்வேலி: நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களை முழு நேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையை உயர்த்த வேண்டும்; அரசு பணியில் காலியிடங்கள் அடிப்படையில் சத்துணவு பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில்
மறியல் போராட்டம் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராசையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோயில் பிள்ளை முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்களை உதவி கமிஷனர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதே போல் தூத்துக்குடி பாளை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பொன் சேகர் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 517 பேரை போலீசார் கைது செய்தனர்.