சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது... : தமிழக அரசு
சென்னை: சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது என்றும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குழந்தைகளுக்கு எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் மதிய உணவு வழங்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மாற்று ஊழியர்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு தயாரித்து வழங்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின்கீழ் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 54.63 லட்சம் குழந்தைகளுக்கு 42 ஆயிரத்து 619 சத்துணவு மையங்கள் மூலமாக சுவையான கலவை சாதம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கென ஒரு லட்சத்து 28 ஆயிரம் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அரசு இவர்களுக்கென பல சலுகைகளை நிறைவாக அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2014-15-ம் ஆண்டில் ரூ.1,412.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்று, 15-ந் தேதி முதல் (நேற்று முதல்) காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சங்கம் உட்பட மேலும் 11 சத்துணவு ஊழியர் சங்கங்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தகுந்த ஆணைகள் வெளியிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அறிக்கை அளித்தனர்.
அதன் பின்னரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையிலான பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். எனவே அரசு இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மூலமும் இதர அரசு அலுவலர்கள் மூலமும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி மாவட்டங்களில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களும் 15-ந் தேதி திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மற்ற வகுப்பு குழந்தைகளுக்கும் ருசியான கலவை சாதம் வழங்கும் பணி தொடருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரால் தொடங்கப்பட்ட போராட்டம் தேவையற்றது. அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் திட்ட செயல்பாட்டில் எவ்வித சுணக்கமும் இன்றி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.