முழு அடைப்புக்கு கரூரில் ஆதரவு.. சாலைகள் வெறீச்
கரூர்: கர்நாடகா அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து விவசாயிகளின் சார்பில் இன்று நடைபெறும் கடையடைப்பை ஒட்டி, கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கபட்டிருந்தன. அரசு பேருந்துகளும் ஒருசில தனியார் பேருந்துகளும் மட்டுமே இயங்கினாலும் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத சாலைகள் வெறிச்சோடியது.
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் புதிய அணை கட்டுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று கரூர் மாவட்டத்தில் கரூர் அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை, பரமத்தி, தான்தோன்றிமலை, தோகைமலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கரூர் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள பல கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கரூர் நகரில் ஜவஹர்பஜார், காமராஜர் மார்க்கெட், உழவர்சந்தை, கோவை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில தனியார் பேருந்துகளும், பெரும்பாலான அரசு பேருந்துகளும் இயங்கினாலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.