சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை- வடகிழக்கு பருவமழை 66% குறைவு
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 66% குறைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலைமையம் கூறியுள்ளது.
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை வரலாறு காணத அளவிற்கு பெய்து சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இந்த ஆண்டு மழையே பெய்யாமல் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நாடா புயலும் வலுவிழந்து வெறுமனே கரையைக் கடந்தது. நவம்பர் மாதம் மழையே பெய்யாமல் கடந்த நிலையில் டிசம்பர் மாதமும் 12 தேதியான நிலையில் சாதாரண சாரல் மழை கூட சென்னையில் பெய்யவில்லை.
கடந்தாண்டு இயல்பை விட அதிகமாக 53 சதவீதம் அதாவது 676.1 மி.மீ. அளவுக்கு மழைப் பொழிவு இருந்தது. ஆனால், இந்தாண்டு இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவு மழை பொழிவு இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்து போன மழை
கடந்த 45 ஆண்டுகளில் 1974 மற்றும் 1995ம் ஆண்டுகளில்தான் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட மிகக் குறைவாக பெய்துள்ளது. 1974ம் ஆண்டில் சராசரி மழையைவிட 34 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு இருந்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது என்பது வானிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.
வானிலை எச்சரிக்கை
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயலானது வலுவிழந்துள்ளதாக கூறினார். விசாகப்பட்டினத்துக்கு 990 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ள வர்தா புயல் வருகிற டிசம்பர்12 ஆம் தேதி வலுவிழந்த நிலையில் நெல்லூர்-காக்கிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை பெய்யாது
சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை, எனினும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்று வேகமாக வீசும் காரணத்தால் மீனவர்கள் ஆந்திரப் பகுதியோரம் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்து போன மழை
இயல்பைவிட 66% பருவமழை குறைந்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 1974ம் ஆண்டு போல கடும் வறட்சி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.