விபத்தில் கணவனை இழந்த வடமாநிலப் பெண்ணிடம் சில்மிஷம்- காவலாளி மீது புகார்
கோவை: கோவையில் விபத்தில் கணவனைப் பறிகொடுத்த வடமாநில பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த காவலாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிஐடியு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி நிவாரண தொகை பெற்று செல்வதற்காக அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் தனது குழந்தையுடன் தங்கியிருந்ததாகவும், அப்போது அந்த நிறுவனத்தின் காவலாளி அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காவலாளியும், அவரது நண்பரும் இணைந்து அந்தப் பெண்னை ரயில் மூலம் ஓடிசாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் நேரில் சென்று விசாரித்த போது வடமாநிலப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.
இதே போன்று மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 30 தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சிஐடியு தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.