சென்னையில் சனிக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பில்லை- நம்பலாமா நார்வே வானிலை மையம் சொல்வதை?
சென்னை: நம்ம ஊரு வானிலை முன்னறிவிப்புகள் கூட தவறி விடும். ஆனால் இந்த நார்வே நாட்டு வானிலை முன்னிறிவிப்புகள் இதுவரை தவறியதில்லையாம். இவர்களும் கம்ப்யூட்டரைப் பார்த்துதான் கணிக்கிறார்கள். என்றாலும் துல்லியமாகவே சொல்கிறார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.
வானிலையை கணிப்பது என்பது நிச்சயம் சவாலான விஷயம்தான். மிக மிக துல்லியமாக இதைச் சொல்ல முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் கிட்டத்தட்ட சரியான முறையில் கணிப்பது சற்று சாத்தியமானதாகவே தெரிகிறது.
உலகின் அனைத்து நாடுகளிலும் சாட்டிலைட்கள் தரும் விவரங்கள், படங்கள், தரவுகளை அதிவேக கம்ப்யூட்டர்கள் உதவியோடு ஆய்வு செய்து வானிலை அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சமயத்தில் இது தவறி விடும். சில நேரம் சரியாக இருந்து விடும்.
ரமணன் கணிப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை கன மழையா, கடும் வெயிலா.. ரமணன் என்ன சொல்கிறார் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். காரணம், அவர்தான் தமிழகத்து வானிலை மைய இயக்குநராக இருப்பவர்.
சொன்னா நடக்காதே
ரமணன் குறித்து பொதுவான கருத்து உண்டு. அதாவது அவர் சொன்னால் அதற்கு எதிர்மாறாக நடக்கும் என்பதே அது. ஆனால் இந்த முறை அவர் சொல்லச் சொல்ல மழை பெய்கிறது. அவர் சொன்னபடி நடக்கிறது. அதுதான் மாணவர்களை "ரமணன் ரசிகர்களாக்கி" விட்டது ஓவர் சீசனில்!
துல்லியமாக சொல்லும் நார்வே
ஆனால் நார்வே நாட்டு வானிலை மையம் இன்னும் மிகத் துல்லியமாக வானிலை முன்னறிவிப்புகளைச் சொல்லி வருகிறது. அவர்களது ஊர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமான கணிப்புகளை இவர்களது http://www.yr.no/ இணையதளத்தில் பார்க்கலாம்.
சென்னைக்கு
இந்த இணையதளத்தில் சென்னைக்கு என்ன சொல்லியுள்ளனர் என்று போய்ப் பார்த்தால் சனிக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பில்லை என்று போட்டுள்ளனர்.
இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை இன்று முழுவதும் தட்பவெப்ப நிலை மிதமாக இருக்கும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மிக மிக லேசான வெயிலுடன் கூடிய இதமான வானிலை நிலவும். 5 மணிக்கு மேல் இன்னும் குளிர்ச்சி நிலவுமாம்.
நாளை?
இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 5 மணி வரையும் ஜில்லென்ற தட்பவெப்பமே நிலவும். காலை 5 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரைக்கும் 24 டிகிரி வெப்ப நிலையுடன் லேசான காற்றும் வீசக் கூடும். முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை 28 டிகிரி வெப்பநிலையுடன் சீதோஷ்ண நிலை ஜில்லென்று இருக்கும்.
சனிக்கிழமை
சனிக்கிழமையும் மழைக்கு வாய்ப்பில்லை என்று இந்தக் கணிப்பு கூறுகிறது. அன்றும் மேக மூட்டமாக இருக்கும், லேசான வெயில் அடிக்கும். ஜில்லென்று கிளைமேட் இருக்கும் என்று இந்த முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
28க்கு மேல் என்ன நடக்கும்?
28ம் தேதிக்கு மேல் கனத்த மழைக்கு வா்ய்ப்புள்ளதாக நம்ம ஊர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பார்க்கலாம்.. பொறுத்திருந்து மழை வருதா இல்லையா என்று.