தமிழக அரசுக்கு நிதி நெருக்கடியாம்.. சட்டசபை நிகழ்ச்சிகளை 'லைவ்' செய்ய முடியாதாம்
சென்னை: நிதி நெருக்கடியால் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி லோக்சட்ட கட்சியின் மாநிலத் தலைவர் டி.ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார்.
விதி முறை இல்லையே
இம்மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தைப் போல சட்டசபை நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று விதிமுறைகள் எதுவுமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் லைவ்?
இதையடுத்து எதிர்காலத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வாய்ப்பிருக்கிறதா, இல்லையா என்று அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிறைய செலவாகுமே...
இந்த நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, சட்டசபை நிகழ்ச்சிகள் குறைந்த நாட்களே நடைபெறும். சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமானால் அதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த நிறைய பணம் செலவாகும்.
நிதி நெருக்கடி
தற்போது அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் இதற்கு சாத்தியமில்லை என்றார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.