தற்காப்பைவிட தன்மானம்தான் முக்கியம்.. யாரை பார்த்து கமல் இதைச் சொன்னார்?
சென்னை: தற்காப்பு முக்கியமில்லை, தன்மானம்தான் முக்கியம் என்று முரசொலி பவளவிழா மேடையில் வைத்து நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
பவள விழாவில் நிறைவுரையாற்றினார் கமல். அப்போது, தான் கருணாநிதியின் நீண்ட கால ரசிகன் என்று அவர் குறிப்பிட்டார்.
விழாவிற்கு ரஜினி வருவாரா என கேட்டேன். ரஜினி வருவார், ஆனால் விழா மேடையின் கீழேதான் அமர்வதாக கூறியுள்ளார் என்று கூறினார்கள் என்று நினைவுகூர்ந்தார் கமல்.
தன்மானம் முக்கியம்
கமல் மேலும் பேசியதாவது: ரஜினி கீழேதான் அமர உள்ளதாக கூறியதும், நானும் கீழேயே அமர்ந்துகொள்கிறேன் என்றுதான் கூறினேன். மேடையில் அமர்ந்தால் எதையாவது பேசி சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருந்திருக்கும். ஆனால் பிறகு கண்ணாடி முன்னால் நின்று என்னை நானே பார்த்து கேட்டுக்கொண்டேன். "டேய் முட்டாள், தற்காப்பு முக்கியம் அல்ல. தன்மானம் தான் முக்கியம். முரசொலி மேடையில் அமரவில்லை எனில் முட்டாள் ஆகியிருவ" என சொல்லிக்கொண்டேன். இதன்பிறகு விழா மேடையில் அமர கிடைத்த மாபெரும் வாய்ப்பை நழுவ கூடாது என வந்தேன் என்றார் கமல்.
ரஜினி என்கிறார்கள் நெட்டிசன்கள்
கமல் இவ்வாறு நேரடியாக ரஜினியை குறிப்பிட்டு பேசியதால், இது ரஜினியை பார்த்து, கமல் செய்த விமர்சனம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. விழா மேடையில் ஏறி ரஜினி பேசியிருக்க வேண்டும் என கமல் விரும்பியதைத்தான் இவ்வாறு தன்னை பார்த்தே பேசிக்கொண்டதாக உவமையோடு கமல் கூறியதாக நெட்டிசன்கள் கருதுகிறார்கள்.
அரசியல் பார்வை
மற்றொரு பக்கம், கமல் இவ்வாறு கூறியது தமிழக அரசிலுள்ளவர்களை நோக்கி என்ற அரசியல் பார்வையையும் சிலர் முன் வைக்கிறார்கள். டெல்லி கூறுவதன்படிதான் அதிமுக அரசிலுள்ளவர்கள் செயல்படுவதாக விமர்சனம் உள்ளது. இரு அணிகள் இணையும் அவசரத்தின் பின்னணியிலும் டெல்லி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கமல் அரசை காத்துக்கொள்ள விரும்பும் தற்காப்பு முக்கியமில்லை என அரசிலுள்ளவர்களைதான் குறிப்பிட்டு மறைமுகமாக விமர்சனம் செய்ததாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மோதல் போக்கு
தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கும் நடுவே அவ்வப்போது பேட்டி மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.