ஜெ.வின் கொடநாடு பங்களாவில் கொலை நடந்தது.. ஆனால் கொள்ளை போகலை... போலீசின் 'அடேங்கப்பா' விளக்கம்!
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்தது உண்மைதான்... ஆனால் கொள்ளை எதுவுமே போகவில்லை என நீலகிரி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்தது உண்மைதான்... அதேநேரத்தில் எந்த வித பொருள்களும் கொள்ளையே போகவில்லை என்று நீலகிரி போலீசார் புதிய விளக்கம் தந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நேற்று அதிகாலை காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொடநாடு பங்களாவில் இருந்த தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாலும், ஜெயலலிதா, சசிகலா அறைக் கதவுகள், 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டதாலும் கொள்ளை போயிருக்கலாம் என்பது உறுதியாகி இருந்தது.
ஆனால் நீலகிரி போலீசாரோ இன்று திடீரென. கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்தது மட்டுமே உண்மை.. எந்த பொருளுமே கொள்ளையே போகவில்லை... சிசிடிவி கேமராவும் செயல்படவில்லை... கொலைக்கான துப்பே கிடைக்கவில்லை என அந்தர்பல்டி அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.