டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்பில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்
தடைசெய்யப்பட்ட குட்காவை விற்க லஞ்சம் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி ராஜேந்திரன் பதவி காலத்தை நீட்டித்ததில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூர்: தடை செய்யப்பட்ட குட்காவை விற்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்பில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாகி வருகிறது என குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்த நிலையில் சென்னை அருகேயுள்ள செங்குன்றத்தில் உள்ள குட்கா நிறுவனம் ஒன்றின் பங்குதாரர் மாதவ ராவ்-க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்ப்போது தடை செய்யப்பட்ட குட்காவை விற்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், காவல்துறை அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு பணம் கொடுத்த டைரியும் சிக்கியது.
இந்நிலையில் டிஜிபி ராஜேந்திரன் பதவி காலம் முடிந்த நிலையில் அவருடைய பதவி காலம் மீண்டும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நீட்டிப்புக்கு அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஶ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி பதவி நீட்டிப்பு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர் மீது வாய்மொழி குற்றச்சாட்டுதான் உள்ளதே தவிர வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.