விஜயபாஸ்கர் விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் முதல்வர் எடப்பாடி மல்லுக்கட்டு- மீண்டும் தியானம்?
அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.
சென்னை: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் டிடிவி தினகரனோ இதை விரும்பவில்லையாம். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வருகிறதாம்.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கினார். அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆவணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றிருந்தன. இந்த ஆவணங்கள் வெளியானது முதலே விஜயபாஸ்கர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள்.
விஜயபாஸ்கரை நீக்கலாம்
இது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிடலாம் என மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
டிடிவி தினகரன் எதிர்ப்பு
ஆனால் டிடிவி தினகரனோ, விஜயபாஸ்கர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படமாட்டார் என பேட்டி கொடுத்தார். அமைச்சர்களை நீக்குவது பற்றி எப்படி டிடிவி தினகரன் பேட்டி தரலாம்? அவர் திட்டமிட்டே தம்மை அவமானப்படுத்துகிறாரே என கொந்தளித்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி.
தாவும் அமைச்சர்கள்
ஏற்கனவே டிடிவி தினகரனின் நால்வர் அணியால் பல அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் இந்த அதிருப்தி அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டு ஓபிஎஸ் பக்கம் போகலாம் என கூறப்படுகிறது.
விரைவில் தியானம்?
தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் மூத்த அமைச்சர்கள் ப்ளஸ் கொங்கு எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு போய் எந்த நேரத்திலும் அமர்ந்து தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.