விவசாயிகளின் அவலத்தைப் பாடலாக பாடி அழ வைத்த நொய்யல் விவசாயி!
கரூர்: நொய்யல் விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் தங்களது நிலையை பாடலாகப் பாடி அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டார்.
கரூர் மாவட்டம் நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் நல சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கரூர் அருகே நடைபெற்றது. நொய்யல் பகுதியில் உள்ள சின்ன பொன்னாச்சியம்மன் கோவில் ஆலமரத்தடியில் நொய்யல் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் நொய்யல் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்க்கு நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் நொய்யல் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 12 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு கலப்பதால் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக கெடுவதுடன், விவசாய நிலங்களில் விவசாயம் ஏதும் செய்ய முடியாத நிலையும், பல்வேறு தோல் நோய்களும் ஏற்பட்டு வந்ததுடன், வாய்க்கால் பாசனத்தின் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் நாசமாகியது.
மேலும் குடிநீரில் மாசு கலப்பதால் தோல்நோய்கள் மட்டுமில்லாமல், விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆற்று நீரை தூய்மைபடுத்தி விவசாயத்திற்கு ஏற்றார்போல் மாற்ற வேண்டும். மேலும் இழப்பீட்டு ஆணையம் பரிந்துரையின் படி சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கரூர் அருகே உள்ள புகளூரில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான காகித ஆலை நிர்வாகமானது யூகலிப்டஸ் மரம் வளர்ப்பதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் வருடம் தர வேண்டும், அதுவும் நிலுவையில் உள்ளது. ஆகவே அதையும் அரசு முன்னிறுத்தி உடனே சரிசெய்து விவாசயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்க்கு வந்த கரூர் வெங்கமேடு பகுதியை சார்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர் தனது உள்ளக்குமுறலையும், சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்காக ஒரு பாடலாக பாடி வெளிப்படுத்தினார். அப்பாடலை கேட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ஆனைவரையும் நெகிழச்செய்தது. இக்கூட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்..