பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 11 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தனது கட்சிக் குழுவோடு இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஐந்து தொகுதிகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரியது. இருப்பினும் பேச்சுவார்த்தையின் இறுதியில் ஒரு தொகுதி மட்டும் அக்கட்சிக்கு முடிவானது.
இதுகுறித்து என்ஆர் தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக குழுவுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இதுதான் எங்களது குறிக்கோள்.
திமுகவிடம் ஐந்து தொகுதிகள் கேட்டிருந்தோம். ஒரு தொகுதி தரப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குத் திரும்பிதான். அடுத்த வாரம் தொகுதி என்ன என்பது அறிவிக்கப்படும் என்றார் தனபாலன்.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 5 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி என மொத்தம் இதுவரை 11 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.