பலத்தை நிரூபிக்குமா? பரபரப்பு குண்டுகளை வீசுமா? ஓபிஎஸ் அணி இன்று 32 இடங்களில் உண்ணாவிரதம்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இன்று 32 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவினர்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓ.பன்னீ்ர் செலவம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை அப்பல்லோவில் 75 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்ற ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர 5-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைத்து தரப்பினரும் சந்தேகித்து வந்தனர்.
சசிகலாவுடனான கருத்து மோதலில் அங்கிருந்து பிரிந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடந்த வாரம் மனு அளித்துவிட்டு வந்தனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர். அதன்படி சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்கள் என மொத்தம் 32 இடங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இது அந்த அணியின் பலம் காட்டும் போராட்டமாகவும் அமையும் என்பதால் போராட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் போராட்டம் நடைபெறவுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.