கிணறு சர்ச்சைக்கு தீர்வு... லட்சுமிபுரம் மக்களிடம் ஒப்படைத்தார் ஓபிஎஸ் - வீடியோ
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை இறுதியாக மக்களிடமே ஒப்படைத்தனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் லட்சுமிபுரத்தில் இருந்தது. இங்குள்ள பெரிய ஆழ்துளை கிணற்றில் அதிக திறன்கொண்ட மோட்டர் போட்டு நீர் உறிஞ்சுவதால் கிராம மக்களுக்கு குடிக்க நீர் கிடைக்கவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது.
Recommended Video
அதனையடுத்து, அந்த நிலத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அளந்து பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்பித்தனர். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அங்கு கிணற்றை பொதுமக்களுக்கு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு அடுத்த நாள் கிணற்றை லட்சுமிபுரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்பதாக ஒபிஎஸ் அறிவித்தார். ஆனால், அந்த நிலத்தையும் கிணற்றையும் ஒபிஎஸ் ஆதரவாளரான சுப்புராஜ் என்பவருக்கு கிரையம் செய்து விட்டதாக லட்சுமிபுரம் மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு மீண்டும் மோதல் எழுந்தது.
இந்நிலையில் இறுதியாக அந்த சர்ச்சைக்குரிய கிணற்றை பொதுமக்களுக்குக் கொடுப்பதாக லட்சுமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஒபிஎஸ் தரப்பு ஒப்புக்கொண்டது. இந்தக் கூட்டத்தில் ஒபிஎஸ் சகோதரர் ராஜா கலந்துகொண்டார். அதனையடுத்து இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.