ஓபிஎஸ் கிணறு லட்சுமிபுரம் கிராம மக்களிடம் ஒப்படைப்பு - போராட்டத்திற்கு வெற்றி
லட்சுமிபுரம் கிராமத்தினர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்: லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ் நிலத்தில் இருந்த ராட்சத கிணறு, போர்வேல் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதால் நிலத்தை வாங்கிய சுப்புராஜ் கிராம மக்களிடம் கிணற்றை ஒப்படைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 2 மிகப்பெரிய கிணறுகள் உள்ளன. மேலும் புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.
இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது. ஊராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
ஒபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக கிணறு வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.
லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தோட்டத்து கிணற்றில் இருந்து 3 மாதங்களுக்கு தண்ணீரை எடுத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தோட்டத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை, யாராவது வாங்கினால், அந்த கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்களே அந்த நிலத்தை வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
இதனிடையே தோப்பு, கிணறு ஆகியவற்றை அதே ஊரை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கடந்த 12ஆம்தேதி விற்பனை செய்திருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. தோட்டம் மற்றும் கிணற்றை விற்பனை செய்து விட்டு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது கிராம மக்கள் புகார் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேற்று இரவு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிணறு மற்றும் போர்வெல்லை ஊராட்சிக்கு தானமாக கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக அவருடைய தம்பி ஓ.ராஜா தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டதன் பேரில் ராட்சத கிணறு, போர்வேல் ஆகியவற்றை நிலத்தை வாங்கிய சுப்புராஜ் கிராம மக்களிடம் கிணற்றை ஒப்படைத்தார்.