சொந்த ஊரில் ஓ.பி.எஸ்.. வரலாறு காணாத வரவேற்பு.. கார்கள் அணிவகுப்பு.. அதிர வைத்த தொண்டர்கள்!
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனி அணி தொடங்கிய பின்னர் சொந்த ஊர் வந்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை: முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பிப்ரவரி 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். 7 ஆம் தேதி முதல் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் தலைமையிலான அணியில் முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர். தனி அணி தொடங்கிய பின்னர் முதன்முறையாக சொந்த மாவட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவான பிறகு குலதெய்வக் கோவிலுக்கு வழிபட ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார் ஓபிஎஸ். ஆண்டாள் கோவில், குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் சொந்த ஊருக்கு சென்றார்.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
தனி அணி உருவான பின்னர் முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்டத்துக்கு வந்தார். ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். ஏராளமான வாகனங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அணிவகுத்து சென்றனர்.
தொகுதி மக்களிடம் சந்திப்பு
ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் முத்துராமலிங்கதேவர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, தேனி வழியாக தான் வெற்றி பெற்ற போடி சட்டமன்ற தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.
ஆட்டோ அணிவகுப்பு
செல்லும் வழியெங்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியகுளம், தேனி அல்லிநகரம், கோடாங்கிப்பட்டி, மீனாட்சிபுரம், போடி உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அல்லிநகரம் வரை 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அணிவகுப்பு வரவேற்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
தொண்டர்கள் உற்சாகம்
ஓபிஎஸ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்துக்கு வந்த போதும் இவ்வளவு வாகனங்கள் அவருடன் அணிவகுத்து வந்தது கிடையாது. மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்கு வந்த நாட்களில் கூட இவ்வளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.