அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் ஓ.பி.எஸ்., டிஜிபி ராஜேந்திரன் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சென்றுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்றும், தற்போது அவர் சீராக உள்ளதாகவும் மருத்துவனை சார்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு வீடு திரும்புவார் என்றும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.