டிடிவி தினகரன் அறிவிப்பு.. ஓ.பி.எஸ் குதுகலிப்பு.. பேச்சுவார்த்தைக்கு ரெடி என அறிவிப்பு
இப்போது பந்து பன்னீர்செல்வம் பக்கம் உள்ளது. அவர் இஷ்டப்படிதான் இனி ஆட்டம் போகப்போகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை: அதிமுகவிலிருந்து நேற்றே பிரிந்துவிட்டதாக அக்கட்சியின் (அம்மா பிரிவு) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்த சில நிமிடங்களிலேயே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன்தான் தங்கள் குடும்ப ஆதிக்கத்தை அதிமுகவில் நிறுவ பார்க்கிறார்கள் என்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் குற்றச்சாட்டு. இதனால் இரு அணிகளாக இருதரப்பும் முறுக்கிக்கொண்டு நின்றனர்.
இந்த நிலையில் நெருக்கடி காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி இப்போது இறங்கி வந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.
அமைதி ஓ.பி.எஸ்
பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்க உள்ளதாக எடப்பாடி குழு அறிவித்துள்ளது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி அமைதியாகத்தான் இருந்தது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் திடீரென மாற்றம் நிகழ்ந்துள்ளது.
டிடிவி தினகரன் பேட்டி
இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அதிமுகவிலிருந்து நேற்றே தான் ஒதுங்கி விட்டதாக தெரிவித்தார். இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஓ.பன்னீர்செல்வம். மிகவும் மகிழ்ச்சியான முகத்தோடு பேட்டியளித்தார் அவர்.
முதல் வெற்றி
அப்போது, தங்கள் தர்ம யுத்தத்தில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். எடப்பாடி தரப்போடு அமர்ந்து பேசி உடன்பாட்டுக்கு வர தயார் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிரடி ஆட்டம்
இப்போது பந்து பன்னீர்செல்வம் பக்கம் உள்ளது. அவர் இஷ்டப்படிதான் இனி ஆட்டம் போகப்போகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மத்திய அரசின் அபார பலத்துடன் உள்ள பன்னீர்செல்வம் இனிமேல் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கப்போகிறார் என ஆரூடம் கூறுகிறார்கள் அவர்கள்.